தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ள இஸ்ரேலின் ரேடார்கள்
2027 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அமைய உள்ள தனது ஆலையில் உற்பத்தியை ரேடார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக இஸ்ரேல் அரசு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இஸ்ரேலின் நவீன ரேடார்கள்
ELTA Systems என்பது, இஸ்ரேலிய அரசு நிறுவனமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI), நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.
ELTA Systems, DCX சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ELTX சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலகிரியில் ஒரு புதிய ரேடார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளது.

இந்த தொழிற்சாலைக்கான கட்டுமானப்பணிகள் ஏப்ரல் 2027 இல் நிறைவடையும் என்றும், அதைத் தொடர்ந்து செயல்பாடுகள் தொடங்கும் என்றும் தெரிவித்தது.
இது, மேம்பட்ட ரேடார் அமைப்புகளின் உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கான ஒரு மையமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா (Make in India) மற்றும் ஆத்மநிர்பர் பாரத் (Atmanirbhar Bharat) ஆகிய தற்சார்பு திட்டங்களின் கீழ் இந்தத் தொழிற்சாலை நிறுவப்படுகிறது.
இது உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதோடு, இந்தியாவின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தித் திறன்களைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று IAI தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கூட்டு முயற்சியானது, இந்திய அரசின் மேக் இன் இந்தியா தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதிலும், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை நோக்கி இந்தியாவின் மூலோபாய மாற்றத்தை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கியப் படியாக அமையும் என தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இஸ்ரேலின் உலகத்தரம் வாய்ந்த வான்வழி ரேடார்கள் மற்றும் தரைவழி அமைப்புகள் உள்ளிட்ட உயர்தர பாதுகாப்பு அமைப்புகளின் அறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு பரிமாற்றம் செய்வதை சாத்தியமாக்குகிறது.
சுமார் 40 ஆண்டுகளாக இஸ்ரேலின் IAI நிறுவனத்தின் வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா வான்வழி அமைப்புகள், செயற்கைக்கோள்கள், ரேடார்கள் மற்றும் உளவுத் தீர்வுகள் உள்ளிட்ட மூலோபாய அமைப்புகள், இந்தியாவின் முப்படைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் செயல்பாட்டில் உள்ளன.

இந்த தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வந்த உடன், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் கண்டறிதல் திறன்களை மேம்படுத்துவதோடு, ஒரு வலுவான உள்ளூர் சூழலமைப்பின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.
சமீபத்தில், IAI நிறுவனம் மேம்பட்ட ரேடார் அமைப்புகளுக்கான உள்ளூர்மயமாக்கப்பட்ட பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO) திறன்களை மேம்படுத்துவதற்காக ஹைதராபாத்தில் ஒரு மையத்தை திறந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |