ஒவ்வொரு குழந்தைக்கும் $3,600: அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள நிதியுதவி திட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வரி செலுத்துவோரின் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நிதியுதவி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களானால், மாதம் ஒன்றுக்கு அவர்களுக்கு 300 டொலர்கள் உதவித்தொகை வழங்கப்படும். அதுவும் வங்கிக் கணக்கிலேயே சேர்க்கப்படும்.
ஆறு வயதுக்கும் 17 வயதுக்கும் இடையில் உள்ள பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 250 டொலர்கள் வழங்கப்படும். 2019, 2020 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்துள்ள குடும்பங்களுக்கு, ஜூலை 15 முதல் தானாகவே இந்த உதவித்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
பல மில்லியன் குழந்தைகளை வறுமையிலிருந்து காப்பாற்றும் இந்த திட்டம், இப்போதைக்கு ஒரு ஆண்டு அமுலில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதை 2025 வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது என்று ஜோ பைடன் கூறியுள்ள நிலையில், அது ஒருவேளை நிரந்தரமும் ஆக்கப்படலாம் என கருதப்படுகிறது. இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த நிதியுதவி திட்டம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதுதான்.
ஆனால், அதன்படி ஒரு குழந்தைக்கு ஆண்டொன்றிற்கு 2,000 டொலர்கள்தான் வழங்கப்பட்டது. ஜோ பைடன் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உதவித்தொகையை 80 சதவிகிதமும், ஆறு முதல் 17 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கான உதவித்தொகையை 50 சதவிகிதமும் உயர்த்தியுள்ளார்.
உயர்த்தப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, கணவன் மனைவி இருவருக்கும் சேர்த்து 150,000 டொலர்கள் ஆண்டு வருவாய் இருக்குமானால், அவர்களுக்கு இந்த சலுகை உண்டு. ஒருவர் மட்டும் சம்பாதித்து தங்கள் குடும்பம் முழுவதையும் கவனித்துக்கொள்ளும் குடும்பங்களில், சம்பாதிப்பவருக்கு 112,000 டொலர்கள் ஆண்டு வருவாய் இருக்குமானால், அவர்களுக்கும் இந்த சலுகை உண்டு.
ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் மட்டும் இருக்கும் நிலையில் (Single parents), அவர்களுக்கு 75,000 டொலர்கள் வரை ஆண்டு வருவாய் இருக்குமானால், அவர்களுக்கும் இந்த சலுகை உண்டு.
2021க்காக பெற்றோர்களுக்கு இந்த உதவித்தொகையில் பாதி வழங்கப்பட உள்ள நிலையில், மீதித்தொகை, அவர்கள் இந்த ஆண்டுக்கான தங்கள் வருமான வரியை தாக்கல் செய்யும்போது மீதமுள்ள தொகையை கிளைம் செய்துகொள்ளலாம்.