கடைசி ஓவரில் 36 ரன் அடித்து அசத்திய ஜடேஜா! கதிகலங்கி போன கோஹ்லி படை:RCB-க்கு இமாலய இலக்கு
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா ருத்ரதாண்டவம் ஆடியதால், சென்னை அணி 191 ஓட்டங்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் படி முதல் போட்டி மும்பையில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சென்னை அணிக்கு துவக்க வீரர்களான ருத்ராஜ் கெய்வாட் மற்றும் பாப் டூப்ளிசிஸ் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 74 ஓட்டங்கள் குவித்த நிலையில், ருத்ராஜ் கெய்வாட் 33 ஓட்டங்களில் அவுட் ஆகினார். அதன் பின் வந்த சுரேஷ் ரெய்னா 18 பந்துக்கு 24 ஓட்டங்கள், அம்பத்தி ராயுடு 7 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்து, அடுத்தடுத்து வெளியேற ஒரு கட்டத்தில் சென்னை அணி திணறிக் கொண்டிருந்தது.
ஆனால் ஒரு புறம் பாப் டூபிளிசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன் பின் பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியை கட்டுப்படுத்தி வந்தனர்.
இதனால் சென்னை அணி 160-ஐ தாண்டினால் போதும் என்று எண்ணப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா ஐந்து சிக்ஸர்கள் பறக்கவிட, ஒரு பவுண்டரி, ஒரு இரண்டு ஓட்டம், ஒரு நோ பால் என ஒட்டு மொத்தமாக அந்த ஓவரில் மட்டும் 37 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.
இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் குவித்தது. கடைசி ஓவரில் அதிரடியாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 28 பந்தில் 68 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.