சிறையில் இருந்தபடியே தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்! மக்களுக்கு எழுதிய நன்றி கடிதம்
அசாமில் தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறையில் இருந்தபடியே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அகில் கோகோய் மக்களுக்கு கடிதத்தின் மூலம் நன்றி தெறிவித்துள்ளார்.
இந்திய மாநிலம் அசாமில் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர், ஊழல் எதிர்ப்பு, தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக அறியப்பட்டிருப்பவர் அகில் கோகோய் (46). இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான அகில், சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த சூழலில், ஒருமுறைகூட வெளியில் வந்து பிரசாரம் செய்ய வாய்ப்பில்லாத அகில், சிறையில் இருந்தபடியே பல திறந்த மடல்களை தொகுதி மக்களுக்குக்கு எழுதினார். அதில், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டார்.
மேலும், அகிலுக்காக அவரது 85 வயதான தாய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், அகில் 57,219 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். அவருக்கும், 2-வது இடம் பெற்ற பாஜக வேட்பாளர் சுரபி ராஜ்கோன்வாரிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11,875 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம், அசாமில் சிறையில் இருந்தபடி வென்ற முதல் நபர், தேசிய அளவில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு பிறகு 2-வது நபர் என்று வரலாற்றில் தனது பெயரை பதித்திருக்கிறார் அகில் கோகோய்.
இந்நிலையில், தன்னை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சிறையிலிருந்து ஒரு கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார் அகில் கோகோய்.
அதில், "அரசாங்கத்திற்கு எதிராக நின்று என்னை ஆதரித்த அசாம் மக்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
புதிய அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன், அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசு கிராமங்களில் மற்றும் மக்களுக்கு பஞ்சாயத்து மட்டத்தில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும்"என்று கோகோய் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.