மருத்துவமனையில் 18 மணி நேரம் காத்திருப்பு... தந்தை தொடர்பில் அச்சத்துடன் கண் கலங்கிய பிரித்தானிய எம்.பி
பிரித்தானிய எம்.பி ஒருவர் தமது தந்தை சிகிசைக்கு அனுமதிக்கும் முன்னர் 18 மணி நேரம் மருத்துவமனையில் காத்திருக்க நேர்ந்ததாக அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
குறித்த காத்திருக்கும் நேரத்தில் அவர் மரணமடைந்துவிடுவாரோ என தாம் அஞ்சியதாகவும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
நோயாளி ஒருவர் 12 மணி நேரம் காத்திருப்பு
கடந்த அக்டோபர் மாதம் சிகிச்சைக்கு அனுமதிக்கும் முன்னர் நோயாளி ஒருவர் குறைந்தது 12 மணி நேரம் வரையில் மருத்துவமனையில் காத்திருக்க நேர்ந்ததாகவும், இந்த எண்ணிக்கை 43,792 எனவும் NHS இங்கிலாந்து வெளிப்படுத்தியுள்ளது.
@PA
மேலும், செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கையானது 32,776 என பதிவாகியிருந்ததாகவும், 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதுவே உச்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, லண்டனில் இருந்து அவசர அவசரமாக திரும்பிய ஜெஸ் பிலிப்ஸ் எம்.பி தமது 78 வயதான நோயாளியான தந்தையை கவனிக்க சென்றுள்ளார். புதன்கிழமை பகல் 10 மணிக்கு 111 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, காத்திருந்த அவருக்கு, அவசர மருத்துவ உதவிக்குழுவினரை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் 7 மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் சேவையை அனுப்பி வைக்கவில்லை என்றும், பதறிப்போன நாடாளுமன்ற உறுப்பினர், தமது வாகனத்திலேயே தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை
NHS இங்கிலாந்து அமைப்பு மொத்தமாக சிதைந்து போயுள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெஸ் பிலிப்ஸ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். மதியத்திற்கு மேல் சுமார் 7.30 மணிக்கு குயின் எலிசபெத் மருத்துவமனையில் சென்று சேர்ந்த பின்னர் அவருக்கு கடுமையான தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால், வியாழக்கிழமை 3 மணியளவில் அவரை முதியோர்களுக்கான காத்திருக்கும் அறைக்கு ஒரு இருக்கையுடன் அனுப்பி வைத்துள்ளனர். உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸிடம் பகல் 9 மணிக்கு திரும்ப வாருங்கள் எனவும் கூறியுள்ளனர்.
Pic: Steven May
தொடர்ந்து 18 மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னர், மருத்துவமனைக்குள் அனுமதிக்க முடியாத சூழலை எடுத்துக் கூறிய மருத்துவர்கள், குடியிருப்பில் வைத்தே கண்காணிக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பல கட்டத்தில் கண்ணீர்
இப்படியான ஒரு சூழலை தாம் இதுவரை எதிர்கொண்டதில்லை என தெரிவித்துள்ள தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ், பல கட்டத்தில் கண்ணீரை தம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றார்.
நல்ல வேளையாக இரவுப்பணியில் இருந்த ஊழியர்கள் தமது தந்தையை நன்றாக கவனித்துக் கொண்டார்கள், அதனால் பாதிப்பில்லாமல் வீடு திரும்ப முடிந்தது என்றார் ஜெஸ் பிலிப்ஸ்.