படகில் வரும் புலம்பெயர்வோரை திருப்பி அனுப்பும் பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படை: வெளியான வீடியோவின் பின்னணி
ரப்பர் படகு ஒன்றில் வரும் புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையின் ஜெட் ஸ்கீ படகுகள் திருப்பி அனுப்புவது போல் தோன்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், பிரித்தானியாவுக்குள் படகுகள் வாயிலாக வரும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறார்
குறிப்பாக பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக உயர்ந்துவரும் நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்காக 28.2 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா பிரான்சுக்கு வழங்கியும், ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. ஆகவே, தற்போது மீண்டும் 54.2 மில்லியன் பவுண்டுகளை பிரான்சுக்கு வழங்கி ஏதாவது செய்து இந்த புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்தும் முயற்சியின் அடுத்த கட்டத்தில் இறங்கியுள்ளார் பிரீத்தி பட்டேல்.
அதுவும் போதாதென்று, 200 மில்லியன் பவுண்டுகள் செலவில் ரோந்து படகுகளை வாங்கி சட்ட விரோத புலம்பெயர்தலையும், கடத்தலையும் தடுக்கத் திட்டமிட்டுள்ளார் அவர்.
அந்த முயற்சியின் ஒரு கட்டமாகத்தான், பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழையும் புலம்பெயர்வோர் படகுகளை எப்படி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதைக் காட்டும் வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது.
ஆக, எவ்வளவு பணம் செலவானாலும் சரி, எப்படியாவது இந்த சட்ட விரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளார் பிரீத்தி பட்டேல்.
இதற்கிடையில், 2021 ஜனவரியிலிருந்து இதுவரை, அதாவது 8 முதல் 9 மாதங்களுக்குள் 14,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு முழுமையும் கணக்கிட்டாலே, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை வெறும் 8,410தான் என்பது குறிப்பிடத்தக்கது.