ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது மற்றொரு குற்றச்சாட்டு: எச்சரித்த மருத்துவரை நிறுவனம் மிரட்டியதாகவும் புகார்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.
அந்த பவுடர் கருப்பை புற்றுநோய் மற்றும் mesothelioma என்னும் ஒருவகை புற்றுநோய் உருவாக காரணமாக இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்தது. அதற்காக பல பில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கியது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.
இந்நிலையில், மீண்டும் ஒரு குற்றச்சாட்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது வைக்கப்பட்டது தொடர்பான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக Invokana என்ற மருந்தை தயாரிக்கிறது.
ஆனால், அந்த மருந்து, மோசமான பக்க விளைவு ஒன்றை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
2010ஆம் ஆண்டு, அந்த மருந்தை சோதனை முயற்சியாக பயன்படுத்தும்போது, சில நோயாளிகள் உடலில் கீட்டோன் என்று அழைக்கப்படும் அமிலத்தின் அளவு அதிகரித்தது தெரியவந்துள்ளது. ஆனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமோ, இந்த பிரச்சினையை வெளியிடாமல் மறைத்து, 2013ஆம் ஆண்டு, அந்த மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு சந்தைக்கு கொண்டுவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு, சரியாக அந்த மருந்து விற்பனை துவங்கி ஒரே ஆண்டுக்குள், அந்நிறுவனம் அந்த மருந்தின் மூலம் சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் சம்பாதித்துவிட்டது. அந்த நேரத்தில், அந்த மருந்தை உட்கொள்வோர் மோசமான அளவில் நோய்வாய்ப்படுவதாக நிறுவனத்தின் பாதுகாப்பு தொடர்பான குழு நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.
அதேபோல், அதே நேரத்தில், 18 நோயாளிகள், Invokana என்னும் அந்த மருந்தை எடுத்துக்கொண்ட சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவில், இரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும், diabetic ketoacidosis, அல்லது DKA என்னும் பிரச்சினையால்பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதிலுமுள்ள மருத்துவர்களிடமிருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவை தலைமையேற்று நடத்திய Dr. Bruce Leslie என்பவர், இந்த பிரச்சினை குறித்து நிறுவன அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார்.
ஆனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தலைவரோ, Dr. Bruce Leslieக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், Invokana மருந்து குறித்து தேவையில்லாமல் விவாதித்தால், Bruce Leslie பணி நீக்கம் செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்திருக்கிறது.
இந்நிலையில், Invokana மருந்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான Veronica Ryan (58), ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்.
அவரைப் போலவே 39 பேர் பாதிக்கப்பட்டது தெரிந்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமைதி காத்துவந்தது.
2015ஆம் ஆண்டு, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் விசாரணையில் இறங்கி, Invokana மருந்து போத்தலின் மீது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த எச்சரிக்கையை அச்சிடவேண்டுமென உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்த பிரச்சினை போய்க்கொண்டிருக்கும்போதே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் Invokana மருந்தை விற்று, அதிலிருந்து பல மில்லியன் டொலர்கள் வருமானம் பார்த்துவிட்டது.
விடயம் என்னவென்றால், அந்த மருந்து இன்னமும் கடைகளில் கிடைக்கிறது. புகார்களைத் தொடர்ந்து எச்சரிக்கை அச்சிடப்பட்டதால் அதன் விற்பனை குறைந்துவிட்டது என்றாலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், Invokana மருந்தின் மூலம் சுமார் 6 பில்லியன் டொலர்கள் வருமானம் பார்த்துவிட்டதுடன், இன்னமும் அதனால் வருமானம் வந்துகொண்டிருக்கிறது என்பதுதான் கவலைக்குரிய உண்மை!