பிரித்தானிய பயணத்தின்போது மீண்டும் மரபுகளை மீறிய அமெரிக்க அதிபர்... வெளியிட்ட இரகசிய தகவல்கள்
பிரித்தானிய மகாராணியாருக்குப் பிறகு விருந்து நிகழ்ச்சிக்கு வந்து ராஜ மரபுகளை மீறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் மரபுகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ராஜ குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்போர், நிகழ்ச்சி தொடங்கும் முன் நிகழ்ச்சிக்கு வந்துவிடவேண்டும். கடைசியாகத்தான் மகாராணியார் அந்த நிகழ்ச்சிக்கும் வருவார்.
அவர்தான் கடைசியாக வருவார், அவர்தான் முதலில் புறப்படுவார் என்பது மரபு. ஆனால், C7 உச்சி மாநாட்டுக்காக பிரித்தானியா வந்த பல நாடுகளின் தலைவர்களுக்கு மகாராணியார் அளித்த விருந்திற்கு மகாராணியார் வந்த பிறகுதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்தார், இது முற்றிலும் விதி மீறல்! தற்போது, ஜோ பைடன் செய்துள்ள மற்றொரு செயலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு முடிந்து லண்டனிலிருந்து புறப்பட்ட ஜோ பைடன், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, நானும் மகாராணியாரும் நிறைய விடயங்கள் பேசிக்கொண்டோம்.
மகாராணியார் நான் சந்திக்கப்போகும் ரஷ்ய அதிபர் புடின் குறித்தும், சீன அதிபர் ஷி ஜின்பிங் குறித்தும் அறிந்துகொள்ள விரும்பினார் என்று தெரிவித்தார்.
ஆனால், மகாராணியாருடன் தனிப்பட்ட விதத்தில் பேசிக்கொள்ளும் யாரும், தாங்கள் என்ன பேசினோம் என்பது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்பது மரபு.
அத்துடன், ஜோ பைடன் மகாராணியாரை சந்திக்கும்போது தான் அணிந்திருந்த குளிர் கண்ணாடியையும் அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர்மீது வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், இவை எவற்றையுமே மகாராணியார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்!