அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு!
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18யில் இருந்து 21 ஆக உயர்த்த உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது.
இந்த நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.
Photo Credit: Jae C. Hong/AP
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், 'அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும்.
ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம். அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும். பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல. நமது குழந்தைகளை, குடும்பத்தினரை, சமூகத்தினரை பாதுகாப்பதற்காகத்தான். பள்ளிகளுக்கு, தேவாலயங்களுக்கு, கடைகளுக்கு செல்வதற்கான நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக இதை செய்ய வேண்டும்.