பிரித்தானிய ராணியாரை சந்தித்த பின்னர் ஜோ பைடன் சொன்ன நெகிழ வைத்த அந்த வார்த்தை
பிரித்தானிய ராணியாரின் தனித்தன்மையும் நடத்தையும் தமது தாயாரை நினைவு படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் G7 மாநாடில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர் வந்திருந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வின்ட்சர் கோட்டையில் ஜோ பைடன் தம்பதி ராணியாரை நேரில் சந்தித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக முன்னெடுக்கப்படும் இந்த சந்திப்பில், இருவரும் உலக நடப்புகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு ஊடகங்களிடம் பேசிய ஜோ பைடன், பிரித்தானிய ராணியாரின் தனித்தன்மையும் நடத்தையும் தமது தாயாரை நினைவுக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், எனது இந்த கருத்து அவரை அவமதிப்பதாக ஆகாது என்றே தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, ராணியாரை ஒருமுறை வெள்ளைமாளிகைக்கும் வந்து செல்ல அழைப்பு விடுத்ததாக பைடன் தெரிவித்துள்ளார்.
ராணியாருடனான சந்திப்பில், ரஷ்ய ஜனாதிபதி புடின் குறித்தும் சீன ஜனாதிபதி ஜின்பிங் குறித்தும் அதிகம் தெரிந்துகொள்ள அவர் விரும்பியதாக பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய ராணியாரை உத்தியோகப்பூர்வமாக சந்திக்கும் 13வது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். ஆட்சியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவரை முதன் முதலாக பிரித்தானிய ராணியார் சந்திக்கும் போது, ஜோ பைடனுக்கு 8 வயதிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.