2021 ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் விலகல்! ராஜஸ்தான் அணிக்கு மேலும் ஒரு பெரிய அடி
2021 ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆர்ச்சர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து மற்றும் சசெக்ஸ் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், 2021 இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாட மாட்டார் என்பதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) உறுதிப்படுத்தியுள்ளது.
ஆர்ச்சர் இந்த வாரம் பந்துவீச்சுக்கு திரும்பினார், மேலும் ECB மற்றும் சசெக்ஸ் மருத்துவ குழுக்கள் அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.
ஆர்ச்சர் தனது பயிற்சியை அடுத்த வாரம் தொடங்கி, சசெக்ஸுடன் முழு பயிற்சியில் ஈடுபடுவார். அவர் தொடர்ந்து பந்து வீசி வலி இல்லாமல் இருந்தால் அடுத்த பதினைந்து நாட்களில் அவர் கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் எந்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை ECB உறுதிப்படுத்தும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் விளையாடிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில் ஆர்ச்சரும் விலகியுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 1 வெற்றிப்பெற்று 3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளிப்பட்டியில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.