இந்திய தொற்றின் மீது நடவடிக்கை எடுக்க தவறினார்: பிரதமர் ஜோன்சனுக்கு எதிராக 4,000 குடும்பங்கள்
இந்தியாவின் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல், கடந்த கால தவறையே பிரதமர் போரிஸ் ஜோன்சன் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏப்ரல் மாத துவக்கத்திலேயே அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும், நடவடிக்கை முன்னெடுக்காமல், பயணிகளை நாட்டுக்குள் அனுமதித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் உருமாற்றம் கண்ட வீரியம் மிகுந்த தொற்று தற்போது அச்சுறுத்தி வருகிறது என்றனர். திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்வுக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவல் தொடங்கி ஓராண்டு கடந்த பின்னரும் அமைச்சர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என அந்த குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் உருமாற்றம் கண்ட தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
ஜூன் 21ல் பிரித்தானியா சாதாரண நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இந்திய தொற்றால் சிக்கல் ஏற்படலாம் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக பயணத்தடையை அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஏப்ரல் 9ம் திகதி அறிவித்துள்ள நிலையில், புதிய உருமாற்றம் கண்ட தொற்று மிக வேகமாக பரவுவது குறித்து பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பிரித்தானியா ஏப்ரல் 23ம் திகதியே தடை விதித்துள்ளது.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த தடை அறிவிப்பது தொடர்பில் ஒரு குழப்பத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவில் இருந்து பிரித்தானியா திரும்பிய 122 பேர்களுக்கு புதிய உருமாற்றம் கண்ட கொரோனா அடையாளம் காணப்பட்டது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் இந்தியா சிவப்பு பட்டியலில் இடம்பெறுவதற்கு முன்பு பிரித்தானியா வரும் எவரும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதுடன் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யவும் வேண்டி இருந்தது.