அமெரிக்காவை தொடர்ந்து 'J&J' தடுப்பூசிக்கு தடை விதித்த பிரபல நாடுகள்! என்ன காரணம்?
அமெரிக்காவை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை தென்னாபிரிக்கா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசி என்பதால் மிகவும் பிரபலமடைந்தது.
ஒற்றை டோஸ் என்பதால் மக்களுக்கு எளிதாக வழங்கவும், சேமிக்கவும் வசதியாக இருக்கும் என்பதால் அமெரிக்காவை தொடர்ந்து தென்னாபிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது.
அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த தடுப்பூசியை கிட்டத்தட்ட 6.8 மில்லயன் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் இதுவரை 6 பேருக்கு அரிதான இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றோருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 18 முதல் 48 வயதுக்குட்பட்ட பெண்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தடுப்பூசி போட்ட 6 முதல் 13 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றியது.
இந்நிலையில், அமெரிக்கா முதல் நாடாக ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை தன் மக்களுக்கு வழங்குவதற்கு இடைக்கால தடை விதித்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடுப்புசியை தடை செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 300,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த தடுப்பூசியை விநியோகிக்க 24 மணிநேரம் இருந்த இருந்த நிலையில் தடை விதித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொருத்து முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கனடா அரசாங்கம் இந்த தடுப்பூசியின் 10 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்துள்ளது, ஆனால் அதன் முதல் தொகுப்பு கூட விநியோகிக்கப்படவில்லை.
அதேபோல், பிரித்தானியா 30 மில்லியன் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி டோஸ்களை ஆர்டர் செய்திருந்தாலும், இன்னும் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை.