கோவிட் அறிகுறிகளையே மாற்றிவிட்ட Omicron: இப்போது என்னென்ன அறிகுறிகள் அதிகம் காணப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
Omicron வகை கொரோனா வைரஸ், கோவிட் அறிகுறிகளையே மாற்றிவிட்டதாக பிரித்தானிய அரசு அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவோருக்கு, டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகம் காணப்பட்ட முந்தைய மூன்று மாதங்களை ஒப்பிடும்போது, 80 சதவிகிதம் அதிகம், தொண்டை அழற்சி (sore throat) என்னும் அறிகுறி காணப்படுகிறது.
அதே நேரத்தில், வாசனை மற்றும் சுவை இழப்பு என்னும் அறிகுறியோ தற்போது Omicron வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோருக்கு மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
ஆனாலும், மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், இருமல் ஆகிய கொரோனா வைரஸுக்கே உரியதான அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை. டெல்டா வைரஸ் தொற்றின்போது இருந்தது போலவே, இப்போது Omicron வகை கொரோனா வைரஸ் தொற்றுடையோருக்கும் இதே அறிகுறிகளும் தொடர்கின்றன.
பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சியின் ஆய்வு ஒன்றில், Omicron வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 174,755 பேர் மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 87,930 பேரின் மருத்துவ அறிக்கைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆய்வில், Omicron வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் 54 சதவிகிதம்பேர் தொண்டை அழற்சி இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், 13 சதவிகிதம்பேர் மட்டுமே வாசனை மற்றும் சுவை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆக, டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றின்போது கொரோனா அறிகுறிகளில் முதல் 10 இடங்களுக்குள் இருந்த வாசனை மற்றும் சுவை இழப்பு என்னும் அறிகுறி, தற்போது Omicron வகை கொரோனா தொற்றின்போது 17ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டது.
ஆனாலும், இன்னமும் மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், இருமல் ஆகிய கொரோனா வைரஸுக்கே உரியதான அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.