முப்படை தளபதி பிபின் ராவத்துடன் சேர்ந்து உயிரிழந்த அதிகாரி! 2 குழந்தைகளுடன் தவித்த மனைவிக்கு கிடைத்த ஆறுதல்
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத்துடன் சேர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரி பிரதீப் என்பவர் உயிரிழந்த நிலையில் அவர் மனைவி அரசு பணியில் சேர்ந்துள்ளார்.
கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் தவித்து வந்த ஸ்ரீலட்சுமிக்கு அரசு பணி கிடைத்துள்ளது அவருக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், உள்ளிட்ட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது.
இதில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். பிபின் ராவத்துடன் உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் கேரளாவை சேர்ந்த ஜூனியர் வாரண்ட் அதிகாரி பிரதீப்.
அவரின் மனைவி ஸ்ரீலட்சுமிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற முடிவை ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி எடுத்திருந்தார். அதன்படி நேற்று தாலுகா அலுவலகத்துக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த ஸ்ரீலட்சுமி கிளார்க் பணியில் சேர்ந்தார்.
பணிக்கான ஆவணத்தில் கையெழுத்திட்ட போது அவருக்கு கண்ணீர் பீறிட்டு வந்தது. பின்னர் அவர் கூறுகையில், இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அங்கிருந்தார். ராஜன் கூறுகையில், மாநில அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி, ஸ்ரீலட்சுமிக்கு பணி வழங்கியுள்ளது.
வேலை மட்டுமின்றி, 5 லட்ச ரூபாயும், பிரதீப்பின் உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தைக்கு மருத்துவ செலவுகளுக்கு 3 லட்ச ரூபாயும் மாநில அரசு வழங்கியுள்ளது என கூறியுள்ளார்.