பிரித்தானியா எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை: பணிக்கு வர ஐரோப்பிய ஒன்றிய சாரதிகள் விதித்துள்ள நிபந்தனை
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை தெருச்சண்டையாக மாறியுள்ள நிலையில், பிரித்தானியாவுக்கு பணிக்கு வருவதற்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளனர் ஐரோப்பிய ஒன்றிய சாரதிகள்.
பிரித்தானியாவில் வாகனங்களில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள், ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
கனரக வாகானங்களை இயக்க சாரதிகள் இல்லாததே பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
பெரும் ஊதியம் தருவதாகவும், மூன்று மாத தற்காலிக விசா தருவதாகவும் கூறி வெளிநாட்டு சாரதிகளைக் கவர பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டார்.
ஆனால், மூன்று மாத விசா போதாது என்று கூறியுள்ளார்கள் போலந்து, பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் நாட்டு கனரக வாகன சாரதிகள்.
போலந்தில் பிறந்தவரும், ஜேர்மனியில் வாழ்பவருமான Jakub Borzykowski என்னும் சாரதி, போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ள ஆஃபர், தங்களுக்கு தேவையான பணி பாதுகாப்பு உறுதியை அளிப்பதாக இல்லை என்று கூறுகிறார்.
நான் ஒரு தற்காலிக விசாவில் பணிபுரிய விரும்பவில்லை என்று கூறும் Jakub, நான் எதிர்காலம் குறித்து யோசிக்கிறேன், பிரித்தானியா குறைந்தபட்சம் 12 மாத விசா கொடுக்குமென்றால், நான் என் வாழ்வைக் குறித்து திட்டமிடமுடியும். ஆனால், மூன்று மாத விசா என்றால், கஷ்டம். மூன்று மாதங்களுக்கு 12,000 டொலர்கள் ஊதியம் தருவார்கள், அதற்குப் பிறகு நான் என்ன செய்வது? என்கிறார்.
Andrzej Dobrowolski (44) என்னும் சாரதி கூறும்போது, சாரதிகள் போரிஸ் ஜான்சனின் ஆஃபரைக் கேள்விப்பட்டு சிரிக்கிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் வேலை பார்க்கும் நாங்கள், எதற்காக நான்கு மாத வேலைக்காக எங்கள் நிறுவன வேலையை விடவேண்டும் என்கிறார்கள். எங்களுக்குப் பணம் முக்கியமில்லை என்பது போரிஸ் ஜான்சனுக்குப் புரியவில்லை. குறைந்தது மூன்று ஆண்டுகளாவது எங்களுக்கு வேலை இருக்கவேண்டும் என்கிறார்.
இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, உடனடியாக இராணுவத்தை களமிறக்கி எரிபொருள் கொண்டுவரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.