விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா? பழ.நெடுமாறனுக்கு ஆதரவு தெரிவித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரகாரன் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறியதை கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆதரித்து பேசியுள்ளார்.
பழ.நெடுமாறன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், அவர் பொதுவெளியில் தோன்றுவார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியது பல விவாதங்களை கிளப்பியது. ஆனால் அவரது கூற்றை இலங்கை ராணுவம் மறுத்தது.
இந்த நிலையில் பழ.நெடுமாறனின் கூற்றை ஆதரித்து மூத்த வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
இதுகுறித்து நேர்காணலில் அவர் கூறுகையில், 'அன்புக்குரிய மேதகு சகோதரர் பிரபாகரன் இருக்கிறார் , எனக்கு வந்த தகவலின்படி உரிய திட்டங்களுடன் வருவார் என அண்ணன் நெடுமாறன் கூறியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதை சரிதான் என்றும் சொல்கின்றேன். காசி ஆனந்தனும், அண்ணன் நெடுமாறனும், நானும் அவருடன் பயணித்தவர்கள். 79களில் இருந்து பயணித்திருக்கிறோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எனக்கும், நெடுமாறனுக்கும் தெரியும், மேலும் புலமைப்பித்தனுக்கும் தெரியும். இங்கே இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு 85, 86களுக்கு பிறகு தான் பிரபாகரனை தெரியும். ஆனால் நாங்கள் 79களில் இருந்தே அவருடன் பயணித்தோம், நாங்கள் பாண்டிபஜார் சம்பவத்திலும் இருந்தோம்.
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி அவர் 87யில் இலங்கைக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர் இந்தியாவுக்கு வரவில்லை. அவரை அங்கு சென்று பார்த்தவர்கள் தான் இங்கு இருக்கிறார்கள்.
அருமை சகோதரர் பிரபாகரனை எல்லோரும் எளிதில் சந்தித்துவிட முடியாது. எங்களைப் போன்ற ஆட்களுக்கு செய்திகள் வரும். நீண்ட, நெடுகாலமாக நாங்கள் தொடர்பில் இருந்ததால் தான் சொல்கிறோம்.
அண்ணன் நெடுமாறன் மரியாதைக்குரிய பிரபாகரனுக்கு உற்ற அண்ணனாக இருந்தவர். அதேபோல் என்னிடமும் பிரபாகரன் மனம்விட்டு பேசுவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு தடை இருக்கிறது. எனினும், கனடா மற்றும் ஒரு சில நாடுகளில் நீக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் தடை நீங்கிய பிறகு தான் எதுவும் பேச முடியும். எனினும் ஆதரிக்கலாம்.
தடையை நீக்க நீதிமன்றத்தை நாட வேண்டும், மத்திய அரசிடம் பேச வேண்டும். பிரபாகரனுக்கு எனது வயது, 70 வயதை எட்டியிருப்பார். இந்த நேரத்தில் தான் சொல்ல முடியும். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து சொல்ல முடியாது. நாளைக்கே வந்துவிடுவார். இங்குள்ள தடையை நீக்க வேண்டும். இப்போது இங்கு உள்ள நிலையை கூறுகிறோம்.
இப்படி கூறுவதன் மூலம் தடையை நீக்குவதில் சிக்கல் வரலாம். ஆனால் அவர் வருகிறார் என்றால் வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றத்தை நிறுத்த நினைப்பார்கள். 360 கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோயில்கள் இருந்த பல இடங்களில் புத்த சிலைகளை வைத்துள்ளார்கள்.
இதுபோன்ற விடயங்களை பிரகாரன் வருகிறார் என்றால் யோசிப்பார்கள். ஈழப்பிரச்சனையை அறிந்தவன், தெரிந்தவன் என்ற நிலையில் பிரபாகரன் இருக்கிறார் என்று கூறியது ஒரு விழிப்புணர்வு வர வேண்டும் மற்றும் அவருக்கு 70 வயதிருக்கும் வேளையில் தான் கூற முடியும். இவ்வாறு பல விடயங்களை ஆராய்ந்து, அண்ணன் நெடுமாறனுக்கு வந்த தகவலின்படி இப்படி கூறியுள்ளார்' என தெரிவித்துள்ளார்.