உண்மை வெளியே வரும் வரை ஜாமீன் கூடாது! நீதிமன்றத்திற்கு வெளியே வந்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மீதான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியின் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கைதான பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆரம்பகட்ட நிலையில் விசாரணை இருப்பதால் நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிசிஐடி பொலிசார் தரப்பிலும், மாணவியின் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் கோரிய ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கின் வாதம் முடிந்தவுடன், மாணவி ஸ்ரீமதியின் தாய், அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆகியோர் வெளியே வந்தனர். அப்போது ஊடகத்திடம் பேசிய ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறுகையில்,
'என் பொண்ணுக்கு தக்க நீதி கிடைக்கணும். எல்லா உண்மைகளும் வெளியே வரணும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் எப்போதும் கொடுக்கக் கூடாது' என தெரிவித்துள்ளார்.