மாணவி ஸ்ரீமதி வன்கொடுமை செய்யப்பட்டாரா? மாடியில் இருந்தது இரத்தமா? பெயின்டா? வெளிவந்தது உண்மை
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் கைதான ஐவர் தொடர்பில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி.
பள்ளியின் மாடியில் இருந்தது ரத்தம் கிடையாது பெயின்ட் என தடய அறிவியல் துறை நிபுணர்கள் கூறியதை சுட்டிகாட்டி தகவல்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனை தொடர்பாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நன்றாக படிக்க வேண்டும் என மாணவிக்கு அறிவுரை கூறியதற்காக ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரும் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பொருத்தமற்றது. மாணவியின் தற்கொலை குறிப்பிலும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
மருத்துவ அறிக்கையின்படி, மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தலோ அல்லது கொலையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார். மாணவியின் மரணத்தில் பல்வேறு முரண்பாடுகளை கூறினாலும், அந்த குற்றச்சாட்டுகள் பாலியல் குற்றச்சாட்டுக்கோ அல்லது கொலைக்கோ பொருந்தவில்லை.
நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என குழந்தைகளை கட்டாயப்படுத்துகின்றனர். வேதியியல் பாடம் தனக்கு கடினமாக இருப்பதால் வீட்டிலிருந்து படிக்கிறேன் என அந்த மாணவி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் ரத்தக் கசிவுகள் மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டு இருக்கலாம்.
மர்ம உறுப்பிலும் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ரத்த மாதிரிகள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதை ஆய்வு செய்த தடய அறிவியல் துறை நிபுணர்கள், அது ரத்தம் அல்ல. சிவப்பு நிற பெயின்ட் என கூறியுள்ளனர்.
போக்ஸோ சட்டப்பிரிவு 305 மனுதாரர்களுக்கு பொருந்தாது. ஆகவே, பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் என 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.