கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில்... கர்நாடக மாணவிகள் ஹிஜாப் சர்ச்சை குறித்து கமல்ஹாசன் கருத்து
கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை போராட்டமாக வெடித்த நிலையில் அது தொடர்பில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்து மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர்.
இதனால் கர்நாடக மாநில அரசு மாணவ- மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் மற்றும் காவி துண்டு அணிந்து வந்தனர்.
இதனால் இருபிரிவினர் கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது, பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதல்காரர்களை விரட்டி அடித்தனர்.
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2022
நேற்று அங்குள்ள பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் மாணவியை சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினார்கள்.
ஆனால் அந்த மாணவி அவர்களை பார்த்து அஞ்சாமல் அல்லாவு அக்பர் என சத்தமாக கூறினார். மாணவர்கள் இப்படி மோதி கொள்ளும் சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது எனப் பதிவிட்டுள்ளார்.