கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியலாமா? கர்நாடக உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணையை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பியு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குப் படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் அப்படியே அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கர்நாடகாவில் பல மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனக் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தன.
இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது.
இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரத்தில் இன்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணையை உறுதி செய்துள்ள உயர்நீதிமன்றம் அரசாணைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் நீதிபதி அமர்வு தெரிவிக்கையில், ஹிஜாப் தடை நியாயமானது தான், பள்ளிகளில் மத அடையாள ஆடை கூடாது.
இஸ்லாமிய முறைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டத் தடை தொடரும்
அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.