கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம்
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க உத்தரவு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவேரி பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.
மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யவில்லை என்பதால், எங்களின் குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்தபடி 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தீவிரமடையும் போராட்டம்

ஆனால், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இதில், மாண்டியாவில் முதல்வர் விஜய் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முற்றுகையிட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கர்நாடக ரக்ஷண வேதிகை மாநிலத் தலைவர் டி.ஏ. நாராயண கௌடா, "இந்த தீர்ப்பு கர்நாடகாவின் நலன்களுக்குப் பாதகமானது, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். முழு பந்த் நடத்தி மக்களை சிரமப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது ஒரு கடைசி கட்ட போராட்டமாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இருந்து ஒரு துளி நீர் கூட தமிழ்நாட்டிற்கு செல்லகூடாது என தெரிவித்துள்ள கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், பந்த் அறிவிப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வர உள்ளதாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிட அவருக்கு என் தனி ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. அவருக்கு விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள், அதிகாரிகள் குழுவும் தயார்நிலையில் உள்ளது." என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு செல்ல தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஆனால் இந்த சூழலிலும், முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு செல்வதில் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முந்தைய தினம், ஆகஸ்ட் 2 ஆம் திகதி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் காவேரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |