உக்ரைனில் ரஷ்ய குண்டுவீச்சில் உயிரிழந்த இந்திய மாணவர்! சொந்த ஊர் வந்த உடல்
உக்ரைனில் நடந்த ரஷ்ய குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (21). இவர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வந்தார்.
ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார்
இந்நிலையில் கடந்த 1 ஆம் திகதி கார்கிவ் நகரில் சிக்கியிருந்த நவீன் ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது உடலைப் பெற்றுத்தருமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல் இன்று உக்ரைனிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இறந்த மாணவர் நவீன் குடும்பத்தினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து நவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, நவீன் சேகரப்பாவின் உடலை தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
நவீன் குடும்பத்துக்கு இழப்பீடு
இதனிடையில் மாணவர் நவீன் மறைவையடுத்து அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்திருக்கிறார். அந்தக் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை நவீனின் தந்தை சங்கரப்பா மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாகக் கூறியிருந்தார். என் மகன் மருத்துவராக விரும்பினார். ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லை. அவரது உடலாவது மருத்துவ மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Mortal remains of Naveen Shekharappa Gyangoudar, who was killed in a shelling attack in #Ukraine️ on March 1st, arrives Bengaluru
— ANI (@ANI) March 20, 2022
Karnataka CM Basavaraj Bommai pays last respects to MBBS student Naveen pic.twitter.com/mzfmlnnrEK