இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
பரஸ்பர வரி விதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக வரியை விதிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அத்துடன் தங்களுக்கு விதிக்கப்படும் வரிக்கு நிகர அமெரிக்காவும் அந்தந்த நாடுகளுக்கு வரி விதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஏப்ரல் 2ஆம் திகதி இந்தியா, சீனா மீதான பரஸ்பர வரி விதிப்பு அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
150 சதவீதம் வரி
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் மீண்டும் வரி விதிப்பு குறித்து இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தியாவை பாருங்கள், அமெரிக்காவின் மதுபானத்திற்கு 150 சதவீதம் வரி விதிக்கிறது. இது அந்நாட்டிற்கு அமெரிக்க நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கு உதவுமா? அப்படி நடக்காது என்று நினைக்கிறேன்.
விவசாய பொருட்களுக்கு 100 சதவீதம் வரியை இந்தியா விதிக்கிறது. பரஸ்பர வரி விதிப்பில், ஜனாதிபதி ட்ரம்பிற்கு நம்பிக்கை உள்ளது. அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் ஜனாதிபதி தற்போது நமக்கு கிடைத்து உள்ளார்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்பின் அறிவிப்பிற்கு பின்னர் லோக்சபாவில் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |