கேட் மிடில்டன் பகிர்ந்து கொண்ட அந்த தகவல்... உடனடியாக அறிக்கை வெளியிட்ட ஹரி - மேகன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக காணொளி ஒன்றை பகிர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விரைந்து குணமடைய
தொடர்புடைய அறிக்கையில், ஆரோக்கியத்துடனும் விரைந்து குணமடையவும் கேட் மற்றும் குடும்பத்தினரை வாழ்த்துவதாகவும், அவர்கள் அமைதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இதை முன்னெடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் ஹரி - மேகன் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.
தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் காணொளி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
மேலும், வயிற்று அறுவை சிகிச்சையின் போதே புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது என்றும் கேட் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, இந்த தருணத்தை நன்றி கூறுவதற்கு பயன்படுத்த இருப்பதாகவும், தனிப்பட்ட முறையில் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும், நிலைமையை புரிந்துகொண்டமைக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தையும் செய்து வருகிறோம்
தற்போது சிகிச்சையின் முதற்கட்டத்தில் இருப்பதாகவும், கீமோதெரபியின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தமது மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் கேட் தெரிவித்துள்ளார்.
இது மிகுந்த அதிர்ச்சியளிக்கும் தகவல், ஆனால் வில்லியமும் நானும் எங்கள் இளம் குடும்பத்தின் நலனுக்காக இதை தனிப்பட்ட முறையில் செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என்றும் கேட் மிடில்டன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில், சார்லஸ் மன்னர் கடந்த சில வாரங்களாக தமது அருமை மருமகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவரும் புற்றுநோய் சிகிச்சையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |