என் பேனாவால் இதை எழுத நேர்கிறதே..! இளைஞர் தற்கொலை வழக்கில் கொதித்தெழுந்த பாடலாசிரியர் தாமரை
கோவை இளைஞரின் மரணம் தொடர்பாக பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இளைஞரின் மரணம்
கோவை மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்ற ரத்தினசீலன், கடந்த செப்டம்பர் 21ம் திகதி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தனது மகனின் மரணத்திற்கு அவரது மனைவி விஜி பழனிசாமி தான் காரணம் என்று சிவாவின் பெற்றோர் சமீபத்தில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் தற்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சிவா ரத்தினசீலனின் பெற்றோர் தெரிவித்த தகவலில், சின்னத்திரையில் பணியாற்றும் விஜி பழனிசாமி அவரது முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக தனது மகனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை மனரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தள்ளி இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் கவிதை எழுதுவதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சிவா-வின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சிவாவிடம் விஜி பழனிசாமி தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், சிவாவின் தற்கொலைக்கு காரணம் விஜியும், அவரது குடும்பத்தினரும் அவரது தோழிகளுமே என ஆடியோவில் தெரிவித்து இருப்பதாகவும், மொத்தம் 43 ஆடியோக்கள் கோவை மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் சிவா-வின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பாடலாசிரியர் தாமரை உதவி
இந்நிலையில் மகன் இறந்த சில நாட்களுக்கு பிறகே இந்த ஆடியோ வீடியோ ஆதாரங்கள் சிவாவின் பெற்றோருக்கு கிடைக்க, பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் தாமரையின் உதவியுடன் மீண்டும் காவல்துறையில் மகனின் தற்கொலை வழக்கு தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பாடலாசிரியர் தாமரை, ஏற்கனவே இந்த விஜி என்கிற விஜயலட்சுமியால் தனது குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
எனது பாடல்களில் கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த ஆபாசக்கூத்தை என் பேனாவால் எழுத நேர்கிறதே என்று குறிப்பிட்டு, இந்த விஜி என்கிற விஜிஸ் பழனிச்சாமி ஒரு 'கைதேர்ந்த' கேடி அம்பலப்படுகிறாள், இதுவரை இந்தப் பெண்ணின் பெயரை நான் பொதுவெளியில் உச்சரித்ததில்லை. வேறு ஒரு விதயத்தில் சிக்கி, தானாக மாட்டியதால் இப்போது வெளியிடுகிறேன் என்று தெரிவித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை பாடலாசிரியர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜிக்கும் பாடலாசிரியர் தாமரை இடையிலான சிக்கல்
கடந்த 2012ம் ஆண்டு விஜயலட்சுமிக்கும், பாடலாசிரியர் தாமரையின் கணவர் மற்றும் தமிழ் தேசியவாதியான தியாகுவுக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே தங்களது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தாமரை முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.