தாயின் தனிமையை போக்க விரும்பிய மகள்! மாப்பிள்ளை பார்த்து 2-வது திருமணம் நடத்தி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்
கேரளாவில் மகள் தனது தாயாருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார்.
இதற்காக தனது தாய்க்கு தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்து அவருடன் பேசினார்.
இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமனத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
பிரதிதாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.