வெளிநாடு ஒன்றில் தூங்கி கொண்டிருந்த போது சுட்டு கொல்லப்பட்ட 19 வயது கேரள இளம்பெண்!
அமெரிக்காவில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலபாமா மாகாணத்தில் தான் மரியம் சூசன் மேத்யூ என்ற 19 வயது பெண் கொல்லப்பட்டார். தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மேல் மாடியில் இருந்து தோட்டாக்கள் கூரை வழியாக துளைத்து அவளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணையை பொலிசார் துவங்கியுள்ளனர். மாண்ட்கோமெரி காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தென்மேற்கு அமெரிக்காவின் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலய மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜான்சன் பாப்பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியம் சூசன் மேத்யூ வீட்டின் மேல் தளத்தில் வசிப்பவரின் துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டாக்கள் அவரை துளைத்துள்ளது.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மரியம் சூசன் மேத்யூ கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் பகுதியைச் சேர்ந்த போபன் மேத்யூவின் மகள் ஆவார். சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்து உடலை கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மரியம் மற்றும் குடும்பத்தார் அமெரிக்காவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் வந்தனர் என்றும் அதற்கு முன்னர் அவர்கள் மஸ்கட்டில் இருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.