ஒரே நாளில் திருமணம் செய்து ஒரே நாளில் தாயாக மாறிய இரட்டை சகோதரிகள்! ஆச்சரிய சம்பவம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் தற்போது ஒரே நாளில் குழந்தைகளுக்கு தாயார சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் நாயர். முன்னாள் இராணுவ வீரரான இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி(இரட்டை சகோதரிகள்) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீலட்சுமி இருவரும் திருமணம் ஆகும் வயதை எட்டியதால், இருவருக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து, கடந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, இருவருமே கர்ப்பமானதால், தாங்கள் எங்கு குழந்தைகளாக பிறந்தோமோ அதே மருத்துவமனையில் எங்களுக்கு பிரசவம் நடக்க வேண்டும் என்று இருவரும் விரும்பியுள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்படவே, அவரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இருவரும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், நேற்று முன் தினம் பிற்பகல் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியாவுக்கு பெண் குழந்தையும், மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் (O+) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.