இஸ்ரேலில் ராக்கெட் வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளப்பெண்! விமானத்தில் பறந்துவந்த உடல்... இன்று இறுதிச்சடங்கு
இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலில் பலியான இந்திய பெண் சவுமியாவின் உடல் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்த நிலையில் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஹாமாஸ் அமைப்பின் ராக்கெட் வீச்சு தாக்குதலில் இஸ்ரேல் ஜெருசலேம் பகுதியில் மூதாட்டி ஒருவரை பராமரித்து வந்த கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த நர்சு சவுமியா சந்தோஷ் பலியானார்.
அவரது உடல் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு டெல்அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து தூதரகத்தின் உதவியால் நேற்று காலை அவர் உடல் டெல்லி வந்தது. மத்திய அமைச்சர், இஸ்ரேல் தூதர் ஆகியோர் அஞ்சலிக்குப் பின் அவரது உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இடுக்கியில் இன்று சவுமியாவின் இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட உள்ளன.