25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் KGF; மூடியது ஏன்? தங்கம் விலை குறையுமா?
25 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட கோலார் தங்க வயல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
கோலார் தங்க வயல்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கோலார் தங்க வயல்(KGF).
1880 ஆம் ஆண்டு முதல் இங்கு பிரித்தானிய ஆட்சியாளர்களால் தங்கம் வெட்டி எடுக்கும் பணி தொடங்கியது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், 1956 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்கள் இங்கு தங்கம் வெட்டி எடுத்தனர். இந்த காலக்கட்டத்தில், 900 டன் தங்கம் வெட்டி எடுத்ததாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து, கேஜிஎப்பை நிரவகித்து வந்த மாநில அரசு, இதனை நிர்வகிக்க பாரத் கோல்ட் மைன்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கியது.
ஆண்டுகள் செல்ல செல்ல தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு அதிக தூரம் கீழே செல்ல வேண்டி இருந்தது. இதில் குறைந்த அளவிலான தங்கம் கிடைத்ததோடு, அதை வெட்டி எடுப்பதற்கான செலவுகளும் அதிகரித்தது.
மீண்டும் திறக்கப்படும் KGF
இதன் காரணமாக கடந்த 2001 ஆம் ஆண்டு KGF மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் கேஜிஎப்பை திறக்க அரசு முன்வந்துள்ளது.
பாரத் கோல்ட் மைன்ஸ்க்கு சொந்தமான 1003 ஏக்கர் நிலத்தில் உள்ள 23 மில்லியன் டன் குப்பை கிடங்குகளில் 23 டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த தங்கத்தை பிரித்தெடுக்க உள்ளனர். மேலும், முழுஅளவிலான உற்பத்தி தொடங்கினால், ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் அதிக அளவு தங்கம் வாங்கும் நாடாக உள்ள இந்தியா, ஆண்டுக்கு 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. KGF மீண்டும் தொடங்கப்பட்டால், தங்க இறக்குமதி குறைவதோடு, பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |