மனைவியைக் கொன்றுவிட்டு மாமியாருக்கு ஆறுதல் கூறிய நபர்... திடீரென குறுக்கிட்ட பொலிசார் கூறிய செய்தி
மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய நபர், மாமியாரை அணைத்து ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும்போது, திடீரென குறுக்கே புகுந்த பொலிசார் முக்கிய விடயம் பேச வேண்டும் என்று கூறி, அவரைக் கையோடு அழைத்துச் சென்றார்கள். பிரித்தானிய பெண்ணான கரோலின் கிரீஸ் தீவில் கொல்லப்பட்ட சம்பவத்தில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியின்போது தன் மனைவி கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
மனைவியை அவருக்கு மிகவும் பிடித்த, அவர் வளர்ந்த Alonnisos தீவில் அடக்கம் செய்த பாபிஸ், ஐயோ என் பிள்ளை தாய் இல்லாமல் வளரவேண்டுமே என்பதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி, காண்போரை கண்கலங்க வைத்தது.
கிரீஸில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அபூர்வம் என்பதால், இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை கரோலினுடைய நினைவுநாள் ஆராதனை, கரோலினுக்கு பிடித்த, அவர் வளர்ந்த, அவர் அடக்கம் செய்யப்பட்ட Alonissos தீவில் நடைபெற்றது.
ஆராதனைக்கு வந்திருந்தவர்கள் கரோலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். கரோலினின் கணவனான பாபிஸ், தன் மாமியாரை அணைத்துக்கொண்டு அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த பொலிசார், கரோலின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளதாகக் கூறி அவரை அடையாளம் காட்ட பாபிஸ் வரவேண்டும் என்று கூறி அவரை அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் என்ன நடந்துள்ளது என்றால், கரோலின் கொலை தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, கரோலின் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சிலிருந்த பிட்னஸ் ட்ராக்கரில் முக்கிய தகவல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள் அவர்கள். அதாவது, கரோலின் கொல்லப்பட்டதாக பாபிஸ் கூறிய நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பே, அவரது இதயத்துடிப்பு நின்று போயிருந்ததாக அந்த ட்ராக்கரிலிருந்து தெரியவந்தது.
அத்துடன் CCTV கமெராவிலிருந்த கடிகாரம் ஒன்றும் பாபிஸ் அணிந்திருந்த கைக்கடிகாரத்திலிருந்த ட்ராக்கரும் இந்த கண்டுபிடிப்புக்கு ஒத்துப்போக, பொலிசாரின் கவனம் பாபிஸ் மீது திரும்பியுள்ளது.
ஆராதனையின் நடுவிலிருந்து அவரை அழைத்து வந்த பொலிசார் எட்டு மணி நேரம் துருவித் துருவி விசாரித்ததில், தான்தான் கரோலினை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் பாபிஸ்.
ஆம், நான் தான் கரோலினைக் கொலை செய்தேன் என்று கத்திய பாபிஸ், தான் கரோலினை சந்தித்தது முதல் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவதாகவும், குழந்தையை பிரித்து விடுவதாகவும் கரோலின் அடிக்கடி மிரட்டியது முதல், அன்று நடந்த சண்டையின்போது தன்னை அவர் குத்த, பதிலுக்கு தான் கரோலின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்த, அதற்குப் பிறகுதான், தான் கரோலினை கொலை செய்துவிட்டதை உணர்ந்தது வரை அத்தனையும் ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்துள்ளார் பாபிஸ்.
பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று பாபிஸ் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.