பிரச்சினை ஏற்படுத்தாதே... இளவரசர் ஹரிக்கு மன்னர் அறிவுறுத்தல்: பெரிதாகும் விரிசல்
குடும்பத்துக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் எதையும் பேசவோ எழுதவோ செய்யாதே என மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரியை நேரடியாக அறிவுறுத்தியுள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மன்னரின் கவலை
இளவரசர் ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதிலிருந்தே அவரும் அவரது மனைவி மேகனும் தொடர்ந்து ராஜ குடும்பத்துக்கு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டே இருப்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு ஹரியும் மேகனும் அளித்த பேட்டியும், ஹரி எழுதிய ஸ்பேர் என்னும் சுயசரிதை புத்தகமும், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ராஜ குடும்பத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன.
தற்போது, ஹரியும் மேகனும் மீண்டும் ஒரு புத்தகத்தை எழுதலாம் என கருதப்படுவதால் மன்னர் கவலையடைந்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரிக்கு மன்னர் அறிவுறுத்தல்
இந்நிலையில், ’குடும்பத்துக்கோ அல்லது இளவரசர் வில்லியமுக்கோ பிரச்சினையை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் வெளிப்படையாக பேசவோ எழுதவோ செய்யாதே’ என மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரியை நேரடியாக அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார் Tom Quinn.
அத்துடன், மன்னர் ஒரு விடயத்தைக் கூறியும் அதை யாராவது பின்பற்றாவிட்டால் என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆக, அவர் சொன்னதைச் செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார் Tom Quinn. ஆக, மன்னர் சார்லசுக்கும் ஹரிக்கும் இடையிலான பிளவு பெரிதாகியுள்ளதையே இந்த விடயம் காட்டுவதாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |