மார்கன், திரிபாதி அதிரடி: 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
திரிபாதி மற்றும் அணித் தலைவர் மார்கனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கேஎல் ராகுல் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் டக் அவுட்டானார். கிறிஸ் ஜோர்டான் 18 பந்தில் 30 ஓட்டங்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் சேர்த்தது.
மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 31 ஓட்டங்கள் சேர்த்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 124 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ரானா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஷுப்மான் கில் 9 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த சுனில் நரேன்டக் அவுட்டானார். ஓரளவு பொறுப்புடன் ஆடிய ராகுல் திரிபாதி 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய அணித்தலைவர் மார்கன் சிறப்பாக விளையாடி 47 ஓட்டங்களுடன் அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி.
இது கொல்கத்தா பெற்ற இரண்டாவது வெற்றி ஆகும். பஞ்சாப் அணி பெற்ற 4வது தோல்வி ஆகும்.