பாகிஸ்தானிடம் நாங்க தோற்க இது தான் காரணம்! வெளிப்படையாக ஒத்துக் கொண்ட கோலி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கோலி வெளிப்படையாக கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12 இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில், நாங்கள் இந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை என்றே கூறுவேன். பாகிஸ்தான் இன்றைய போட்டியில் எங்களை மிஞ்சிவிட்டது.
அவர்கள் அற்புதமாக ஆட்டத்தை துவங்கினர். அதே சமயம் நாங்கள் 20 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, ஒரு நல்ல துவக்கமாக இல்லை. பாகிஸ்தான் அணி, எங்களுக்கு பேட்டிங்கில் எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்கவில்லை.
முதல் பாதியில் பந்து மெதுவாக வந்தது, இரண்டாவது பாதி போன்று மைதானம் அப்போது இல்லை. எங்களுக்கு இன்னும் ஒரு 15 முதல் 20 ஓட்டங்கள் கூடுதலாக கிடைத்திருக்க வேண்டும்.
நிச்சயம் ஒரு நல்ல துவக்கம் தேவை, ஆனால் பாகிஸ்தான் அணி எந்த ஒரு இடத்திலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த போட்டி மூலம் நாம் நம்முடைய பலத்தை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
ஏனென்றால் பனிப்பொழிவான இது போன்ற மைதானங்களில் மெதுவாக பந்து வீசும் பந்துவீச்சாளர்களால் திறம்பட செயல்பட முடியாது. இது போட்டியின் முதல் ஆட்டம், கடைசி ஆட்டம் அல்ல என்று கூறி முடித்தார்.