கோலி இதை முதலில் விட்டு கொடுக்க வேண்டும்! கபில்தேவ் அறிவுரை
இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள கோலி, தன்னுடைய ஈகோவை விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின் கோலி, தன்னுடைய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி விலகல் குறித்து முன்னணி வீரர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் வீரரான கபில்தேவ், கோலியின் இந்த முடிவு குறித்து கூறுகையில், கோலியின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். டி20 கேப்டன் பதவியை கைவிட்டதில் இருந்து அவர் கடினமான காலகட்டத்தை சந்தித்து வருகிறார்.
அவர் ஒரு முதிர்ந்த மனிதர். இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் அவர் கடுமையாக யோசித்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை, அவர் கேப்டன் பதவியை மகிழ்ச்சியாக அனுபவிக்கவில்லை என்பதாக இருக்கலாம்.
நாம் அவருக்கு ஆதரவளித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும், சுனில் கவாஸ்கர் கூட எனக்கு கீழ் விளையாடினார். நான் கே.ஸ்ரீகாந்த் மற்றும் அசாருதின் கீழ் விளையாடினேன்.
எனக்கு ஈகோ இல்லை. கோலி தனது ஈகோவை விட்டுவிட்டு இளம் கிரிக்கெட் வீரரின் கீழ் விளையாட வேண்டும். இது அவருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் உதவும்.
புதிய கேப்டன், புதிய வீரர்களை விராட் வழிநடத்த வேண்டும். பேட்ஸ்மேனான விராட்டை எங்களால் இழக்க முடியாது என்று கூறியுள்ளார்.