கோலியின் கனவு தகர்ந்தது! வீட்டிற்கு அனுப்பிய கொல்கத்தா: கடைசி ஓவரில் வெற்றி
பெங்களூரு அணிக்கெதிரான பிளே ஆப், எலிமினேட்டர் போட்டியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிளே ஆப் சுற்றின் இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.
குறிப்பாக இன்றைய போட்டியில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோலி, டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வேல்ஸ் ஆகியோரின் விக்கெட்டை கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் எடுத்தார்.
இதுவே பெங்களூரு அணிக்கு பெரும் அடியாக விழுந்தது. நான்கு ஓவர் வீசிய சுனில் நரைன் 21 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதன் பின் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களான சுப்மன் கில் 29 ஓட்டங்கள், வெங்கடேஷ் அய்யர் 26 ஓட்டங்கள், அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி(6) என வெளியேற, சுனில் நரைன் மற்றும் நிடிஷ் ரானா ஆட்டத்தை கையில் எடுத்தனர்.
இதில் சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்தில் 26 ஓட்டங்களும், நிடிஸ் ராணா 23 ஓட்டங்களிலும் பவுலியன் திரும்ப, இறுதி கட்டத்தில் வந்த மோர்கன் மற்றும் ஷகில் அல் ஹசன் கொல்கத்தா அணிக்கு கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை தேடித் தந்தனர்.
19.4 ஓவரில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி கொல்கத்தா அணி, வரும் 13-ஆம் திகதி டெல்லி அணியுடன் மோதவுள்ளது, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 15-ஆம் திகதி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.
இந்த ஐபிஎல் தொடரோடு, கோலி தன்னுடைய கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றுவிடுவோம் என்று கோலி கூறியிருந்தார். ஆனால் அவரின் கனவை இன்று கொல்கத்தா சுக்கு நூறாக உடைத்து, வீட்டிற்கு அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.