மனைவியை கொன்றான்.. பிணையில் வெளிவந்தவன் இன்னொரு திருமணம் செய்தான்: ஒரு தந்தையின் கண்ணீர்
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான நபர், பின்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில், கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.
கொல்லம் மாவட்டத்தில் கடந்த 2019ல் கிருதி என்ற இளம் தாயார் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் கணவன் வைஷாக் என்பவரே, மனைவியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்ந்து வைஷாக் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் இருந்தார். ஆனால் 42 நாட்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.
இந்த விவகாரம் அப்போது கொல்லம் மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பொலிசார் வேண்டும் என்றே குற்றவாளிக்கு உதவியதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கொல்லப்பட்ட இளம் தாயார் கிருதியின் தந்தை தற்போது கேரளாவை உலுக்கும் மர்ம கொலைகள் தொடர்பில் உருக்கமாக பேசியுள்ளார்.
வைஷாக் வெறும் 42 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும், செல்வாக்கு மற்றும் பணம் இருப்பதால் தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளதாகவும் கூறும் அவர்,
சிறையில் இருந்து வெளியான இரண்டு வாரத்திலேயே பெண் தேடும் நடவடிக்கையில் வைஷாக் மற்றும் அவரது தந்தை இறங்கியதாக இவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆனால், குறித்த பெண்ணின் வீட்டார் தம்மை தொடர்பு கொண்டு விசாரித்ததால் அந்த திருமணம் முடங்கியதாகவும், அதற்கு பின்னர் வைஷாக் தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது மகளை பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதன் விளைவாக தாம் இப்போது 80 லட்சம் ரூபாய் கடனில் தத்தளிப்பதாக கூறும் அவர்,
ஆனால் வைஷாக் இன்னொரு திருமணம் செய்து கொண்டு மீண்டும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார் என்றால், தனது மகளின் கொலைக்கு நீதி கிடைப்பது எப்போது என அவர் கண் கலங்கியுள்ளார்.