கணவருடன் வாக்குவாதம்... படுக்கை அறை ஜன்னல் வழியே இரவில் கண்ட காட்சி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் புகுந்த வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த இளம் பெண் மரணமடைந்துள்ளார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் மனைவி 22 வயதான அனுஜா என்பவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்.
கடந்த மாதம் 30ம் திகதி இரவு படுக்கையறையில் தூக்கிட்ட நிலையில் அனுஜா மீட்கப்பட்டார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவரை கொல்லம் நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அனுஜா மரணமடைந்துள்ளார். மாமியாரின் துன்புறுத்தலே தமது மகளின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என குறிப்பிட்டு, அனுஜாவின் தந்தை அனில்குமார் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.
சதீஷின் தாயார் சுனிஜாவுக்கு எதிராக குடும்ப வன்முறை, துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சதீசுக்கும் அனுஜாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சில நாட்களிலேயே சுனிஜா தம்மை துன்புறுத்த தொடங்கினார் என அனுஜா பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று அனுஜாவும் சதீஷும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அனுஜா படுக்கையறைக்குள் சென்றுள்ளார். பொதுவாக, வாக்குவாதம் ஏற்பட்ட நாட்களில் அவர் படுக்கையறையில் இருந்து வெளியே வருவதில்லை என்பதால் யாரும் கவனிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், இரவு பலமுறை முயன்றும் கதவு திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது, தூக்கிட்ட நிலையில் அனுஜாவை கண்டுள்ளனர்.
இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்ற சதீஷ், மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.