சட்டமன்ற தேர்தலில் சீமானை வீழ்த்தி ஜெயித்த திமுக எம்.எல்.ஏ-வின் கட்சி பதவி பறிப்பு! அவர் செய்த தவறு என்ன?
சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி சங்கர் கடும் போட்டிகளுக்கு இடையே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் இதனையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாக தொடர் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த புகார்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதோடு சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக கே.பி சங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவரை மேற்குப் பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.