பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமி! வேதனையில் இருந்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
தமிழகத்தில் பெற்ற குழந்தைகளை கொலை செய்த வழக்கில் குன்றத்தூர் அபிராமி சிறையில் உள்ள நிலையில் அவரின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமி (25). தம்பதிக்கு 7 மற்றும் 4 வயதில் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். கடந்த 2018ல் அபிராமிக்கும் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இது குறித்து இருவீட்டாரும் அறிந்த நிலையில் அவர்களை கண்டித்தனர். ஆனால் திருமணத்தை மீறிய உறவு அபிராமியின் கண்ணை மறைத்ததால் அவர் அதை கேட்காமல் கணவர் இரவு வேலைக்கு சென்ற பின்னர் சுந்தரத்துடன் பழக்கத்தை தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் தனது மகிழ்ச்சிக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக நினைத்து அவர்களை கொல்ல முடிவெடுத்தார். அதன்படி பாலில் 5 தூக்க மாத்திரைகளை போட்டு குடும்பத்துக்கு தந்துள்ளார். விடிகாலையில் இறந்திருப்பார்கள் என்று நினைத்துள்ளார்.
ஆனால் மகன், கணவன் இருவருமே சாகவில்லை.. பெண் குழந்தை மட்டும் படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள்.
மறுநாள் விஜய் வேலைக்கு சென்றதும், 4 வயது மகனின் மூக்கையும், வாயையும் பொத்தி துடிதுடிக்க கொன்றார்.
பின்னர் காதலன் சுந்தரத்துடன் கன்னியாகுமரிக்கு தப்ப முயன்ற போது பொலிசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் அபிராமிக்கு உச்சக்கட்ட தண்டனையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் அப்போது கொந்தளித்தனர்.
தற்போது புழல் சிறையில் அபிராமியும், சுந்தரமும் உள்ளனர். இந்த வழக்கு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த மாதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில், அபிராமிக்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அபிராமியின் சகோதரர் 27 வயதான பிரசன்ன மணிகண்டன் தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் நீண்ட நேரமாக யாருடனே செல்போனில் சண்டை போட்டு வந்ததாக தெரிகின்றது.
இதையடுத்து இரவு நேரத்தில் தனது அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதை பார்த்த அவர் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பிரசன்னா இளம் பெண்ணொருவரை காதலித்து வந்தார். இதுபற்றி அறிந்த இருதரப்பு பெற்றோர், இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், அபிராமி விவகாரம் இளம்பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்தினர். அந்த இளம்பெண்ணும் பிரசன்னாவின் தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என தெரியவந்தது. மேலும் அடுத்த மாதம் அபிராமியின் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இதில், அவருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.