உ.பி.யில் பயங்கரம்: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை
இந்தியாவில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்டவர் பூபேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மூன்றாவது தளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலத்தின் அருகே உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் காணப்பட்டது.
வழக்கறிஞர் பூபேந்திர சிங் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததார், திடீரென்று துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, சென்று பார்த்த போது அவர் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்தார் என சம்பவயிடத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி, தனிநபர் வழக்கறிஞர் பூபேந்திர சிங்கை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
சம்பவத்தின் போது அவரைச் சுற்றி வேறு யாரும் இல்லை. தடயவியல் குழு சம்பவயிடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர் என ஷாஜகான்பூர் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் கூறினார்.
இந்த சம்பவம் மிகவும் வருத்தமான மற்றும் வெட்கக்கேடானது என்று கூறிய பிஎஸ்பி தலைவர் மாயாவதி, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.