பிரான்சின் ஜனாதிபதியாக தீவிர வலதுசாரித் தலைவர் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள்
பிரான்சின் தீவிர வலதுசாரித் தலைவர் Marine Le Pen அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக, வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் வெற்றி
ஐரோப்பிய ஒன்றிய நிதியைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் வழங்கப்பட்ட குற்றத் தீர்ப்பை இந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தபோதிலும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

இருப்பினும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 18-ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவுக்குள் பல மாற்றங்கள் நிகழக்கூடும்; எனவே, இது ஒரு தேர்தல் கணிப்பு அல்ல, மாறாக வாக்காளர்களின் தற்போதைய மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு நிலவரப் பதிவு மட்டுமே என்றும் கருத்துக்கணிப்பு நடத்துவோர் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், வெளியாகியுள்ள முதன்மையான அனைத்துக் கருத்துக்கணிப்புகளிலும் அவரே முன்னிலை வகித்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றிய நிதியைத் தனது கட்சிப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த போதிலும், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையைக் குறைத்து வேட்பாளராகப் போட்டியிட அனுமதித்தது.
இதனைத் தொடர்ந்து, 57 வயதான தீவிர வலதுசாரித் தலைவரான அவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன.
முதல் சுற்றில் அவர் 36 சதவீதம் மக்கள் ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறார். கடந்த மாதங்களில் அவருக்கான ஆதரவு 32 முதல் 34 சதவீதம் வரையில் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னர் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆரவாரங்களும் ஏளனங்களும்
அவரது எதிராளிகள் யாருக்கும் அதிகபட்சமாக 19 சதவீதத்திற்கு மேல் தாண்டவில்லை. புதன்கிழமை அன்று தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய Le Pen-க்கு, ஆரவாரங்களும் ஏளனங்களும் கலந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு பிரான்சில் உள்ள லோயர் பள்ளத்தாக்கில் அமைந்த லா ஃபிளெஷ் (La Flèche) நகரின் தெருச் சந்தையில் அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது, பணத்தைத் திருப்பிக்கொடு என சிலரும், சிறக்குச் செல் என சிலரும் முழக்கமிட்டுள்ளனர்.

சிலர் ஜனாதிபதி மரின் என முழக்கமிட்டனர். புதன்கிழமை வெளியாகியுள்ள இன்னொரு கருத்துக்கணிப்பில் தாம் நிரபராதி என்று அவர் கூறியதை பத்து வாக்காளர்களில் ஏழு பேர் ஏற்கவில்லை.
மேலும், தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவை RN வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் ஆதரித்தாலும், 32 சதவீத வாக்காளர்கள் அதை ஆதரிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |