அது தவறு தான்... நினைவேந்தல் நாள் செயல் குறித்து மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்
பிரான்சில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் நினைவேந்தல் நிகழ்வுகளில் முழுமையாக கலந்துகொள்ளாதது தவறு தான் என குறிப்பிட்டு, பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொதுமக்களிடையே கொந்தளிப்பு
தேர்தல் தொடர்பான ஊடக நேர்காணல்களில் கலந்துகொள்ளும் பொருட்டு, பிரதமர் ரிஷி சுனக் பிரான்சில் இருந்து அவசரமாக வெளியேறினார். குறித்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அளித்த விளக்கத்தில், போர்ஸ்மவுத் மற்றும் பிரான்சில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பல நிகழ்வுகளில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காகவும்,
துணிச்சலுடன் போராடியவர்களைச் சந்தித்ததற்கும் நான் பெருமைப்படுகிறேன். நார்மண்டியில் நடந்த பிரித்தானிய நிகழ்வு முடிந்ததும், நான் மீண்டும் இங்கிலாந்து திரும்பினேன். அது தவறு என்பதை உணர்கிறேன்,
அது தவறு தான்
பிரான்சில் நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரையில் தங்கியிருந்திருக்க வேண்டும், அது தவறு தான் என குறிப்பிட்டுள்ளார். ரிஷி சுனக் கலந்துகொண்ட நிகழ்வில், பிரான்ஸ் ஜனாதிபதியுடன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரும் உடனிருந்தனர்.
ஆனால் ஒமாஹா கடற்கரையில் பிற்பகல் நடந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. மாறாக, பிரித்தானியா திரும்பிய ரிஷி சுனக் ஊடகம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்றுள்ளார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |