அண்ணா, உதவி செய்யுங்கள்: வெளிநாடு ஒன்றில் சிக்கி காலை இழந்து கதறும் இலங்கைத் தமிழர்...
சுயலாபத்துக்காக புலம்பெயர்ந்தோரை வைத்து விளையாடும் ஒரு நாட்டின் ஜனாதிபதியால், இரு நாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டதால், காலை இழந்து, ‘அண்ணா, உதவி செய்யுங்கள்’ எனக் கதறும் இலங்கைத் தமிழர்களைக் குறித்த அதிரவைக்கும்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தோரின் வாழ்வுடன் விளையாடும் பெலாரஸ் நாடு
2020ஆம் ஆண்டு, பெலாரஸ் ஜனாதிபதியான Alexander Lukashenko, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதால், அந்நாட்டின்மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. அதனால் அந்நாடு உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவது இன்னொரு தனிக்கதை.
ஆக, தன் நாட்டின்மீது தடைகள் விதிக்கப்பட்டதால், தன் நாட்டுக்கு புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் பெலாரஸ் ஜனாதிபதி, அவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தள்ளிவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்.
ஆனால், இது தெரியாத புலம்பெயர்வோர் பலர், பெலாரஸ் தங்களை உண்மையாக வரவேற்பதாக நம்பிக்கொண்டு அங்கு செல்கின்றனர். அவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிற்குள் பெலாரஸ் அனுப்ப, அந்த நாடு மீண்டும் அவர்களைத் திருப்பி அனுப்ப, இரண்டு நாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கிறார்கள் புலம்பெயர்வோர் பலர்.
PHOTO: LEONID SHCHEGLOV/BELTA/AFP VIA GETTY IMAGES
ஜேர்மனியில் வாழும் இலங்கைத் தமிழருக்கு வந்த தொலைபேசி அழைப்பு
அப்படி சிக்கிய சில இலங்கைத் தமிழர்களைக் குறித்த அதிரவைக்கும் செய்திதான் இது.
ஜேர்மனியில் வாழும் அந்த 37 வயது இலங்கைத் தமிழருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர், அவருடைய மனைவியின் தம்பி. அவருக்கு வயது 25. சட்டச்சிக்கல்கள் கருதி அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை.
அழைத்த 25 வயது இலங்கைத் தமிழர் பெலாரஸ் நாட்டில் படித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் இப்போது அழைப்பதோ லிதுவேனியா நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து.
நடந்தது என்னவென்றால், அந்த 25 வயது இளைஞர், நூற்றுக்கணக்கான மற்ற புலம்பெயர்வோருடன் பெலாரஸிலிருந்து லிதுவேனியாவுக்குள் நுழைய முற்பட்டபோது இரு நாடுகளின் எல்லைக்கும் நடுவில் சிக்கிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டினர் அடுத்த நாட்டுக்கு அனுப்ப, அந்த நாட்டினர் உள்ளே விடாமல் திருப்பியனுப்ப, பனியில் அலைந்து frostbite என்னும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது சிலருக்கு.
அதன் பிறகு லிதுவேனிய அதிகாரிகள் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அழைத்துச் சென்றாலும், மூன்று நாட்களுக்குப் பிறகுதான் மருத்துவ உதவி கிடைத்ததாம். ஆனால், அந்த 25 வயது இளைஞரின் ஒரு கால் முற்றிலும் பாதிக்கப்பட்டு அவரது காலே அகற்றப்பட்டுவிட்டது, மற்றொரு காலின் ஐந்து விரல்களும் அகற்றப்பட உள்ளன.
ஜேர்மனியில் வாழும் அவரது அக்கா, தன் தம்பிக்கு நேர்ந்த கொடுமையை எண்ணிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் அவரை ஆறுதல்படுத்த அவரது கணவரால் இயலவில்லை.
இதற்கிடையில், அந்த 25 வயது இளைஞர் தங்கியிருக்கும் அதே மருத்துவமனையில் 20 வயதான இலங்கைத் தமிழர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலும் அகற்றப்பட்டுவிட்டது.
ஜேர்மனியிலிருப்பவர் தன் மனைவியின் தம்பியிடம் மொபைலில் பேசும்போதெல்லாம், அந்த 20 வயது இளைஞரும், ‘அண்ணா, உதவி செய்யுங்கள்’ எனக் கதறுகிறாராம்.
இந்த இளவயதில் காலை இழந்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என வருந்தும் ஜேர்மனியில் வாழும் அந்த இலங்கைத் தமிழர், லிதுவேனியாவுக்குச் செல்லத் தயாராகிவருகிறார்.
அவரது ஒரே நோக்கம், எப்படியாவது தன் மனைவியின் தம்பியை ஜேர்மனிக்கு அழைத்து வருவதுதான். ஆனால், அது எந்த அளவுக்கு கடினமானது என்பது தெரியவில்லை.
மேலதிக தகவல்களுக்கு...https://www.vice.com/en/article/7k8qqg/lithuania-belarus-migrant-crisis