தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்.. நேரலை
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
35 ஒன்றியங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அமைதியான முறையில் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந் திகதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிகுறி அதன்படி, காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி உள்ளது.. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இதில், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.
2ம் கட்ட வாக்குப்பதிவின்போது பொலிசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 2 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, வரும் 12ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக, இதற்காகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.