லண்டன் பேருந்தில் இரவு நேரத்தில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட பயணி! நடந்தது என்ன? புகைப்படத்துடன் பொலிசார் கூறிய தகவல்
லண்டன் பேருந்தில் ஓட்டுனரை நோக்கி எச்சில் துப்பி அருவருப்பான செயலை செய்ததுடன் மோசமான வார்த்தையால் அவரை திட்டிய நபர் தொடர்பிலான தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது ரூட் 83 பேருந்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி இரவு 10.40 மணியளவில் நடந்துள்ளது. வெம்ப்ளே ஸ்டேடியம் அருகே பேருந்து வந்த போது ஆண் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணியாமல் உள்ளே ஏறினார்.
அப்போது பேருந்து ஓட்டுனர் அவரிடம் மாஸ்க் அணியுமாறு கூறினார். சரி என சொன்னவர் தொடர்ந்து மாஸ்க் அணியாமல் இருந்திருக்கிறார். பின்னர் மீண்டும் அவரிடம் பேசிய ஓட்டுனர், மாஸ்க் அணியா விட்டால் பேருந்தில் இருந்து கீழே இறங்க நேரிடும் என்றார்.
அப்போது பேருந்தில் இருந்து கீழே இறங்க தயாரான அந்த ஆண் பயணி, ஓட்டுனர் அருகே சென்று வேகமாக எச்சில் துப்பினார். எச்சிலானது பேருந்து கண்ணாடி மீது பட்டது, இதோடு மோசமான வார்த்தைகளால் அவரை திட்டினார்.
பின்னர் ஓட்டுனர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார். இந்த நிலையில் இதில் சம்மந்தப்பட்ட நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர், அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்தால் தகவல் கிடைக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி மேட் கெனான் கூறுகையில், பேருந்து ஓட்டுநர்கள் கொரோனா காலம் முழுவதும் பெரும் ஆபத்துக்கு நடுவில் பணியாற்றினர், முக்கிய தொழிலாளர்கள் மற்றும் பொது போக்குவரத்தை நம்பியிருக்கும் மற்றவர்களுக்கும் அத்தியாவசிய சேவையை வழங்குகிறார்கள்.
பேருந்து ஓட்டுனர்களின் வேலையை செய்ய விடாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும் எந்தவொரு தாக்குதலையும் ஏற்று கொள்ள முடியாது. இந்த நபரை அடையாளம் காண நாங்கள் மாற்று வழிகளைத் தொடர்கிறோம், ஆனால் இதுவரை, அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆகையால் புகைப்படத்தில் உள்ள நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கிடைக்கும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.