லண்டனில் முதல் டோஸ் கூட போடாமல் இருக்கும் லட்சக்கணக்கானோர்! வெளியான அதிர்ச்சி தகவல்
லண்டனில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2.7 மில்லியன் மக்கள் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி கூட போடாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனிலேயே ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பொது சுகாதாரத் தலைவர் பேராசிரியர் கெவின் ஃபென்டனால் எச்சரிக்கை எழுப்பியுள்ளார்.
முன்னதாக, முதல் டோஸ் தடுப்பூசி கூட போட முன்வராத வயது வந்த லண்டன்வாசிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் கீழே குறைவாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால், லண்டன் மேயர் சாதிக் கானின் உயர்மட்ட சுகாதார ஆலோசகரான பேராசிரியர் ஃபென்டன், இந்த வாரம் லண்டன் சுகாதார வாரியத்திடம் கூறுகையில், "2.9 மில்லியனுக்கும் அதிகமான 16 வயதிற்கு மேற்பட்ட லண்டன்வாசிகள் இன்னும் தடுப்பூசி பெறவில்லை" என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த வியாழன் இரவு சுமார் 200,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், எண்ணிக்கை 2,708,450 ஆகக் குறைந்துள்ளது. இது பிரித்தானியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி போடப்படாத மக்களில் 45 சதவிகிதம் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட லண்டன் பிள்ளைகளில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இது இந்த வயதுவரம்பில் உள்ளவர்களில் நாட்டிலேயே மிகக் குறைந்த தடுப்பூசி விகிதம் ஆகும்.
அதாவது 12-15 வயதுடைய 425,353 லண்டன் குழந்தைகளில் 130,915 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் பொருள், கோவிட் தடுப்பூசிக்கு தகுதியான கிட்டத்தட்ட மூன்று மில்லியன் லண்டன்வாசிகள் அதைப் பெறாமல் இருக்கிறார்கள்.