லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் பற்றி அருகில் வசிப்பவர்கள் சொன்ன தகவல்
லண்டனில் குடியிருப்பு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் அருகில் வசிப்பவர்கள் சில தகவல்கள் கூறியுள்ளனர்.
இதில் உயிரிழந்த பெண், தீ விபத்து ஏற்பட்டவுடனே தன்னுடைய கணவருக்கு போன் செய்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்வதற்குள், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தை அறிந்து உடனடியாக விரைந்து வந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பது மற்றும் தீயில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற போராடினர்.
இதில், அந்த பெண்ணின் மைத்துனர் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டும் அந்த தீ விபத்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அருகில் வசிக்கும் Scott James(44) என்பவர் கூறுகையில், சம்பவம் தினமான வியாழக்கிழமை மாலை தெருவில் புகை சூழ்ந்ததால், உடனடியாக வெளியே வந்து பார்த்த போது, குறித்த வீடு தீயில் கருகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
தீ கொஞ்சம், கொஞ்சமாக வீடு முழுவதும் மேலே சென்றது. ஆனால் வீட்டில் எந்த ஒரு வெடிப்பும் ஏற்படவில்லை, அதன் பின் தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டதாக கூறினார்.
அங்கு வசிக்கும் James என்பவர் கூறுகையில், நேற்று கூட அவர்களைப் பார்த்தேன். அவர்களை நோக்கி கை அசைத்தேன். ஹலோ சொல்லி அவர்களிடம் பேசினேன். அது ஒரு அழகான குடும்பம்.
ஆனால், இன்று காலை எழுந்தவுடன் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை கேட்டவுடன் கடும் அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.
விபத்து நடந்த வீட்டில் இருந்து சுமார் 10 மீற்றர் தொலைவில் வசிக்கும் 36 வயது மதிக்கத்தக்க Ling Han கூறுகையில், ஒரு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. அதன் பின் வெளியே வந்து பார்த்த போது, தீயணைப்பு வீரர்கள் இரண்டு குழந்தைகளை வெளியில் தூக்கி வந்து, அவர்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
அவர்கள் CPR செய்து குழந்தைகளை காப்பாற்ற போராடினர். அந்த நேரத்தில் எப்படி நான் உதவுவது என்பதே எனக்கு தெரியவில்லை. கடும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.
வீட்டின் முதல் தளத்தில் ஒரு பெரிய தீப்பிழப்பு கொளுந்து விட்டு எரிவதை பார்த்தேன். உயிருக்கு ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று நினைத்து வேதனையடைந்தேன் என்று கூறியுள்ளார்.
இது ஒரு விபத்து போன்று தான் தெரிவதாகவும், இதில் எந்த ஒரு சந்தேகமும் தற்போதைக்கு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதாகவும், இந்த பயங்கரமான சம்பவத்தின் முழு காரணத்தை தெரிந்து கொள்ள, தீயணைப்பு படையில் உள்ள சக ஊழியர்கள் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.