லண்டனில் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடும் 52 வயது நபர்: பொலிசார் வைத்துள்ள வேண்டுகோள்
லண்டனில் கால்பந்து போட்டி நடந்த பகுதியில், 52 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள QPR’s மைதானத்திற்கு அருகில் இருக்கும் Uxbridge சாலை பகுதியில், நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் Queen’s Park Rangers மற்றும் Luton Town அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது.
இதனால் போட்டி முடிந்த பின்பு, ஏதேனும் ஒரு காரணத்தால், அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர் Luton-ஐ சேர்ந்தவர் என்பதும், அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறினர்.
மேலும், குறித்த போட்டிக்கு பின்பு ஏதேனும் சண்டை நடந்ததை ரசிகர்கள் அல்லது வேறு யாரேனும் தங்களுடைய மொபைல் போனில் எடுத்திருந்தால், அதை பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.